ஏறக்குறைய இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களுடனான கலந்துரையாடல் தொடரின் முதல் சுற்றுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசியபோது அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, கொவிட் – 19 தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் தொடர்வதாக அரச தலைவர் குறிப்பிட்டார்.
அரச தலைவர் விரும்பிய இலக்குகளை அடைவதற்குத் தேவையான பலத்தை அளித்து தேசிய வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
அரச தலைவரின் வேலைத்திட்டம் குறித்து பெரும்பான்மையான மக்கள் சாதகமாக உள்ளனர். குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடையும் நோக்கத்துடன் சில பிரிவினர் பரப்பும் குற்றச்சாட்டுகளை வல்லுநர்கள் கடுமையாக நிராகரித்தனர்.
முழு உலகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இலங்கை திட்டமிட்டு முன்னேறி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.